Tuesday, June 27, 2017





விதை உருண்டை 

மரம் நடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் வீட்டில் இடமில்லை , அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறோம் என்றெல்லாம் வருத்தப்படும் நண்பர்கள் மனது வைத்தால் காட்டையே உருவாக்கலாம். எப்படி என்றால் படத்தில் காட்டி உள்ளபடி விதைகளை சேகரித்து விதை உருண்டைகள் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வெளியூர் பயணங்களின் போது சாலையின் இருபக்கங்கள், தரிசு நிலங்களிலும் வீசி விட்டால் போதும். வயல்களில் வீசுவதை தவிர்க்கவும்.

தகுந்த சூழலில் உருண்டைகளில் உள்ள விதை முளைத்து விடும். மாறாக விதைகளாக மட்டும் வீசினால் அவை முளைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.

எனவே விதை உருண்டைகள் மூலம் மரம் வளர்ப்போம், நம் மண்ணை காப்போம் !!


No automatic alt text available.
நன்றி: பசுமை விடியல் 

Monday, June 19, 2017

எனக்கு WHATSAPPல் வந்த சிறுகதை.  படித்தேன், ரசித்தேன், உங்களூக்காகப் பகிர்ந்தேன்.   படங்கள் மட்டும் என்னுடையவை.



குரங்கு பெடல்












தோட்டத்த பாத்திங்களா ? என்ற வளர்மதியின் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை எதிர்கேள்வியே கேட்டேன். ஏன் என்ன ஆச்சு ? பாருங்க அப்புறம் சொல்றேன். போடி காலை பாத்துக்கிறேன்... டயர்டா இருக்கு என என் அலுலக சோம்பலோடு சோபாவில் விழுந்தேன். சரி அப்படியே போய் குளிச்சிட்டு வந்துட்டா சூடா சப்பாத்தி ரெடியா இருக்கு.. என்ற குரல் என்னை பாத்ரூம் நோக்கி தள்ளியது.

”இன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்.. யாரோ கூப்டுறாங்கனு வாசப்பக்கம் போய் பார்த்தேன். ரெண்டு வயசானவங்க. ஏதும் வீட்டு வேலைஇருக்காமானு கேட்டாங்க... ? பார்க்க பாவமா இருந்துச்சு... இருங்கனு சொல்லிட்டு ரெண்டு ஆப்பிள் கொடுத்தேன். வாங்கி வச்சிட்டு... பழையது இல்லையாமனு கேட்டாங்க... நா எங்க போக பழசுக்கு... நாங்க நைட் எப்பவும் சப்பாத்தி இல்லாட்டி ஓட்ஸ்னு சொன்னேன். இந்த தோட்டத்தை சுத்தப்படுத்தி தரோம்னு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லலாம்னு பார்த்தேன். அப்புறம் எப்படியும் தோட்ட வேலைக்கு ஆள் வரசொல்லுவிங்க ரூவா கொடுக்கணும்ல... அதான் சரினுட்டேன்.”

ம்ம்ம் அப்புறம்

செமய சுத்தப்படுத்தி... நல்லா பாத்துகொடுத்துட்டாங்க. ரூ. கொடுத்தேன் வாங்கல.. மதியம் சோறு மட்டும் கேட்டாங்க. சாப்ட்டு போய்ட்டாங்க.

ம்ம். பார்த்து இரு.. இந்த மாதிரி பகல்ல வந்து வீட நோட்டம் பாத்துட்டு சொல்லுவாங்க.

உங்க வாய் இருக்கே என்னைக்கு நல்லத சொல்லியிருக்கு.

ஒய்.. உலகம் நடப்ப சொல்றேண்டி... சும்மா பாலிமர்ல சீரியல் பார்த்தா இதெல்லாம் எங்க தெரியும்...

நீங்க மூடுங்க. லேடிஸ் ரஸ்லிங் பாக்கிறதுக்கு சீரியல் தேவல. போய் படுங்க

நான் சத்தமாய் சிரிக்க கூடுதல் கடுப்பில் சென்றாள். ஆனாலும் தோட்டத்தை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நேராக படுக்க சென்றுவிட்டேன். தூங்கி எழுவதற்குன் என்னைப்பற்றி.. நான் முத்துக்குமரன். சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். ஒரே மகன். இப்போது கோடை விடுமுறைக்கு என் அண்ணன் வீட்டுக்கு சென்று இருக்கிறான். என் மனைவி வளர்மதி. கம்யூட்டர் பட்டதாரி. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வெப் பேஜ் டிசைனிங் நிறுவனம் நடத்துகிறாள் நண்பர்களோடு சேர்ந்து. வீடு சோழிங்கநல்லூர் கடைசி.

ம்ம்ம்ம். நிசமமாவே காசு வாங்கலயா...

அவருக்கு காது கேட்காது போல. அந்தம்மா தான் பேசுது. சோறுபோட்டா போதும்னு சொல்லிட்டாங்க.

ஆம அந்த குழி எதுக்கு...

இங்க விழுற இலைகளை பெருக்கி அந்த குழிக்குள்ள தள்ளிடுங்கனு சொல்லிட்டு போனாங்க.

ம்ம்ம் . ஒகே. இதே மாதிரி மெயிண்டைன் பண்ணா நல்லா இருக்கும்.

நீ ஆபிஸ் கிளம்பலயா... பேச்சை நிறுத்த நாம் செய்ய வேண்டிய வேலையை சொல்வது மனைவிக்கு அழகு.

அடுத்த சில தினங்களில் இரவு என் அருகே மனைவி.

என்னங்க இன்னைக்கும் அவங்க வந்தாங்க.. நீங்க சொன்னது என் மைண்ட்ல ஒடிட்ட்டே இருந்துச்சு. தோட்டவேலை வேண்டாமா கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்குனு சொன்னேன். ஆன அதுக்கு அந்தம்மா.. இல்லைம்மா தோட்டத்தில் இவ்ளோ இடம் இருக்குல்ல.. கொஞ்சம் காய்கறி போட்ட..வீட்ல நல்ல காய்கறி கிடைக்கும்ல சொன்னாங்க. கூடவே தக்காளி கத்திரிக்கா,சின்ன வெங்காய விதையெல்லாம் காட்டுனாங்க.

சரி.. உடனே நீ சரி சொல்லிட்ட.

ம்ம்ம்.. பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியுது. அதான் கேமரால அவங்க உருவம் எல்லா இருக்கும்ல அப்புறம் ஏன் பயப்படுறீங்க...

சரி. உன் இஷ்டம்.

அப்புறம் நாளைக்கும் வராங்க.... நம்ம வீட்டு கிச்சன் இருந்து நாம பாத்திர கழுவுற தண்ணீய அப்படியே செடிகளுக்கு கொண்டு போய்ருவோம்னு சொல்றாங்க.

அதான் பாத்ரூம் குழாய் போதுல்ல..

அங்க சோப் எல்லாம் போடுரோமாம்...கெமிக்கல்னு சொல்றாங்க.

ஒரே ஒரு குழாய் மட்டும் போதும்னு சொல்றாங்க.. வாங்கிபோடச்சொல்லவா ? வீட்லயே நல்ல காய்கறி கிடைச்சா நல்லது தானே..

என்னமோ செய். காலைல ஏடிஎம்ல எடுத்துக்கோ... நம்ம கடையிலே வாங்க சொல்லு. என் மனைவி என்னைவிட சாமர்த்தியசாலி. லேசுக்குள் நம்ப மாட்டாள் அந்த நம்பிக்கையில்... காலம் ஓடியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கி விட்டது.. கிட்டதட்ட மாதங்கள் கடந்திருந்தது.. இதற்கிடையே அவர்கள் வீட்டுக்குள் வரும் அளவிற்கு பழகி விட்டார்கள். ஆனாலும் தோட்டம் சுத்தமாய் இருந்தது. மரங்கள் எல்லாம் பசுமையாய் மாறிவிட்டன. அவை குளிர்ச்சியை கொடுத்தது. அதிலும் குறிப்பாய் வரண்டு போய் இருந்த முருங்கையும், செம்பருத்தியும் வனப்பாய் இருந்தது.

என்னடி இது...

அரிசி உப்புமா கத்திரிக்கா கிச்சடி.. கத்திரிக்கா நம்ம வீட்ல விளைஞ்சது.

ஞாயிற்றுகிழமை சாப்டுற சாப்பாடா இது..

மூச். சும்மா சாப்டு பாருங்க.. வாசனையே செமயா இருக்கு.

உண்மையில் அப்படித்தான் இருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு கத்திரிக்காய் கிச்சடி சாப்பிட்டது இல்லை. மதியம் என்ன தெரியுமா ? நெய் கத்திருக்காய் பொறியல்.

போச்சா.. இன்னும் ஒரு வாரம் இதானா..

இல்லபா நீ வீட்ல இருக்கும் போது தான் இத செய்ய முடியும். இன்னொரு நாள் சிக்கன் சமைப்போம்.

இவ்ளோ விதையோடவா கத்திரிக்கா இருக்கும். ஆச்சரியத்தின் ஊடாகவே சாப்பிட்டேன். எனக்கு என் வீட்டு தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய் என்பதே பெருமையாய் இருந்தது. என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.

இன்னைக்கு ஆபிஸ் கிடையாது போல...

ஏண்டி...

ம்ம்ம்ம் ஏதோ கலவரமாம். கட்சிக்காரன யாரோ வெட்டி கொன்னுட்டாங்களாம். போன் பண்ணி கேட்டுகோங்க.. பக்கத்து விட்டு பசங்க காலேஜ் போகாம திரும்பி வந்துட்டாங்க. நான் அலைபேசியில் பேசினேன். நான் செல்லும் வழியில் தான் பிரச்சினை என்பதாலும்.. ஏற்கனவே சிலர் வந்துவிட்டதாலும்.. இருப்பவர்களை வைத்து கவனிக்கும் படி சொன்னேன். மதியத்திற்கு பிறகு வருகிறேன் என உத்திரவாதம் கொடுத்தேன். மிண்டும் பேப்பரில் மூழ்கினேன்.

யப்பா இங்க வாயேன் என்ற குரலுக்கு வாசலுக்கு வந்தேன். வந்ததும் தெரிந்தது.. இவர்கள் தான் அவர்கள் என்று. இதான் என் வீட்டுகாரரு. அவர்களை பார்த்தேன்... எப்படியும் இருவருக்கும் அறுபது வயதிற்க்கு மேல் இருக்கும்.

வணக்கம்யா. கத்திரிக்க நல்லா இருந்துச்சா.. அந்தம்மா பேசினார்.

நல்லா இருந்துச்சுமா

இன்னும் கொஞ்சநாள்ள சின்ன வெங்காயம் வந்துரும்.. அங்கிட்டு நாட்டுச் செம்பருத்தி வந்துரும். அது மூலிகை. இந்த மண்னுல் வேகம வளரும் அது. நான் பாப்பாட்ட சொல்லியிருக்கேன் அத எண்ணெய்ல போட்டு பயன் படுத்தலாம்.. நல்ல குளிர்ச்சி. முருங்கையும் அப்படித்தான். இப்ப காச்சிரும்.. பூ பூத்ததும் புள்ளைக்கு கொடுங்க.. வயிறு அப்படி சுத்தமாகும் சளியே வராது. இறங்கிடும். அந்த பெரியவர்.. இதில் எல்லாம் கலந்துகொள்ளாவில்லை. அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார். என் மனைவி வீட்டில் இருந்து காபி கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அவர்கள் வேலையை செய்ய தொடங்கினார்கள். என் மனைவி அவர்களோடு பேசத்தொடங்கிவிட்டார். நான் உள்ளே வந்துவிட்டேன்.

வேலை முடிந்து அவர்கள் கைகால் கழுவும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தேன். திண்டில் அவர்களும் நான் ஊஞ்சல் சேரிலும் அமர்ந்தோம்.

ஏன் பணம் வாங்கமாட்டேன்கிறீங்க...

புள்ள சோறு கொடுக்குது. அதுக்கு தானே தம்பி உழைக்கிறோம்... அதுவே கிடைச்சுட்டா அப்புறம் எதுக்கு பணம்

மத்த தேவைக்கு...

பையன் இருக்கான் தம்பி. ஒரு கடையில சூப்பர் வைசர். நல்ல சம்பளம். அவன் பாத்துக்கிறான்.

அப்புறம் ஏன் இப்படி இந்த வயசுல வேலை பார்க்கணும்..

இது வேலை இல்ல தம்பி..ஒரு சந்தோசம். காலம் காலமா விவசாயம் பாத்தவங்க.. இப்ப நிலம் இல்லை... வித்துட்டோம்.. அதான்

இப்படி எத்தனை வீட்ல வேலை நடக்குது..

இந்த ஒரு வீட்ல தான்.

ஏன் ஏன்.. இந்த ஏரியால இதை விட பெரியபெரிய வீடெல்லாம் இருக்கே..

அந்த அம்மா பதில் சொல்லவில்லை. பெரியவர் முகம் பார்த்தார்.

அவர் பேசினார். முதன் முறையாக... இதான் எங்க நிலம்.

எனக்கு சுருக்கென்றது. அங்கே ஒரு அமைதி நிலவியது. உங்க நிலமா... நான் பேங்க் லோன்ல வாங்கி இன்னும் லோன் கட்டிக்கிட்டு இருக்கேன். எப்படி உங்க நிலம்...

அவரே தொடர்ந்தார்.. இந்த நிலத்தில தான் நான் என் அய்யா எல்லாரும் விவசாயம் பார்த்தோம். சுத்திமுத்தி எல்லாரும் வித்துட்டாங்க.. சொல்லிப்பார்த்தேன் யாரும் கேட்கல... நான் நடுவில நிலத்த வச்சி என்ன செய்ய.. அதான் வித்தேன். வித்த காசுல பொண்ணுக்கு பையனுக்கும் பிரிச்சு கொடுத்தாச்சு. எங்களுக்கு கொஞ்சம் பேங்கல இருக்கு.

பெரியவரே நிலம் என்னோடது. நான் காசு போட்டு வாங்கியிருக்கேன். அவருக்கு காது கேட்காது என என் மனைவி சொன்னது நியாபகம் வந்தது.. இன்னும் சத்தமாய் சொன்னேன்.

நிலத்துக்கு மேல தான் நீங்க வாங்க முடியும். நிலத்துக்கி கீழ இல்ல ...கீழ என்ன நடக்குது விவசாயிக்கு தான் தெரியும் எப்பவும் எல்லா நிலமும் முதல்ல விவசாயிக்கு தான்.

எனக்கு கோபம் வந்தது. ஒ அதுனால தான் வந்து வேலை பாத்திங்களா.. நிலம் உங்கதுனு... கொஞ்சம் சத்தமாய் கேட்டேன்.

அய்யோ தம்பி கோபபடாதீங்க. நான் அந்த அர்த்ததில சொல்லல... என் பொண்ண நகை பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாரு என் மாப்பிள்ளை. அதனால் என் பொண்ணு இல்லனு ஆயிடுமா. இதே இந்த மகராசி.. என் மனைவியை கை காட்டினார்... அப்படித்தானே இங்கே வந்திருப்பாங்க. இவங்க மேல இருக்கிற நகை நட்டு இந்த வீடு எல்லாம் உங்களுக்கு சொந்தம் ஆனா உள்ள ஓடுற ரத்தம் இவங்க அப்பா அம்மாக்குள்ள சொந்தமில்லையா. இரண்டு பேர்க்கும் உரிமை இருக்குல்ல. இன்னைக்கும் ஒரு கல்யாணம் காட்சினு அம்மாவீட்டு போய் உக்கார மாட்டாங்களா.. இல்ல இவங்க அம்மா அப்பா எங்களுக்கு தொடர்பே இல்லைனு போய்டுவாங்களா... அது மாதிரி எங்களுக்கு இந்த நிலம். நீங்க வாங்கிட்டிங்க..ஆனாலும் இந்த மண் நாங்க புரண்ட மண் இல்லையா... இத உரிமைல சொல்லல.. உழைச்சிருக்கோம்ங்கிற நம்பிக்கையில சொல்றேன் தம்பி.

எனக்கு கோபம் கொஞ்சம் குறைந்தது.. ஒரு வித ஆற்றாமை பொங்கியது. என்ன சொல்வது என தெரியவில்லை. இந்த பக்க நிலமெல்லாம் காந்த பூமி தம்பி. எது போட்டலும் பூமியில அப்படி புடிச்சி நின்னுகும். மருந்து அடிக்காம இருந்தா கிடைக்கிற ஒவ்வொன்னும் ஒரு மருந்துக்கு சமம். எங்கே.. எல்லாம் போச்சு.. வெறும் வீடுதான். பாருங்க இத்துணூண்டு இடத்திலே இவ்ளோ கிடைக்குது. இனி நீங்க கடையில் கத்திரிக்கா பாத்த என்ன தோணும்.. வீட்டுக்காய் மாதிரி வருமானு தானே..

அதே மாதிரிதான் தம்பி.. என் நிலம்னு எனக்கு தோணும். எத்தனை பேர் கைமாறட்டும். இது என் நிலம் தாம் தம்பி. ஏற்கனவே நிலத்த வித்து காசு வாங்கிட்டேன்.. இப்ப பார்க்கிற வேலை காசுக்கு இல்லை.. ஒரு திருப்திக்கு. இதுல கொஞ்சம் வேலை பார்த்துட்டு படுத்த்தா.. அன்னைக்கு உறுத்தல் இல்லாம தூங்குவேன். ஏதோ அய்யன் கொடுத்த நிலத்தை வித்துட்டோமோனு ஒரு குற்ற உணர்ச்சி. என்னென்னமோ கெமிக்கல் போட்டு நிலத்தை கொன்னு.. செத்த போன நிலம் தண்ணிய வாங்கி வாங்கி குடிக்குது... இது தெரியாம விவசாயி சாகுறான். அவன் நிலம் சாகுது. என்ன செய்ய ..? சின்ன வயசுல சைக்கிள் கத்துக்கும் போது குரங்கு பெடல்னு ஒன்னு போடுவோமே டக்டக்னு ... அது மாதிரி தான் எங்க வாழ்க்கை... வண்டி என்னமோ முன்னாடித்தா போகுது.. ஆனா போற இடத்துக்குள்ள உசுரும் போய்டுது..

சோறு கொண்டா தாயி.. சாப்டு கிளம்புவோம்.. என குரல் கொடுத்தார் மனைவியை நோக்கி.

வாங்களேன் உள்ளே வச்சி சாப்பிடலாம்... அழைத்தேன்

அய்யோ நீங்க ஹோட்டல்காரங்க மாதிரி டேபிள்ள வைச்சி சாப்பிடுவிங்க. சரியா வராது . சாப்பிட்ட திருப்தியே வராது தம்பி.

என் மனைவி பறிமார அவர்கள் சாப்பிட்டார்கள். நான் உள்ளே இருந்தேன். ஆனால் மனம் முழுவதும் அவர்கள் பேச்சில் இருந்தது.

எப்ப வேணா நீங்க வீட்டுக்கு வரலாம்... இது உங்க வீடு மாதிரி.. என்ன வேணா போட்டு வளருங்க.. என்னால் முடிஞ்ச உதவி செய்றேன்.அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது முகம் பார்த்து சொன்னேன்.

ரொம்ப நன்றி தம்பி. ஏதும் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க... உசுரோடு இருக்கிற வரைக்கும் எங்க மண்ணுல வேலை பார்த்தோம்னு திருப்தி போதும். அத கொடுத்திட்டீங்க..நன்றி தம்பி ...என விடைபெற்றார். அப்போதுதான் உணர்ந்தேன்.. அவருக்கு காது கேட்கிறது. ஆனால் விவசாயம் தவிர்த்து எதுவும் பேசவேண்டாம் என அவர் காதுகளை மூடிவிட்டார் என தெரிந்தது. முதல்முறையாக வீட்டை விட தோட்டம் அழகாய் தெரிந்தது...!!!!
 

Image may contain: 1 person



Sunday, May 14, 2017


தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லைஎன்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.








மீள் பதிவு

Saturday, May 13, 2017





அன்னையர் தின வாழ்த்துக்கள்.








தானே வந்து

தரணியெங்கும்

தாங்க முடியாதென்று

தாயைப் படைத்தான்

தாயுமானவன்

தாயவள் பங்கு

தினந்தோறும் இருந்தாலும்

தனியாக ஒரு நாளாவது

தட்டாமல் கொண்டாடுவோம்

தாயைப் போற்றுவோம்

தாய்மையைப் போற்றுவோம்

தட்டாமல் போற்றுவோம்

தப்பாமல் போற்றுவோம்



மீள் பதிவு

Wednesday, May 3, 2017

 பிள்ளையில்லா வீடு


சிறு பிள்ளையில்லா வீடு
வைத்தது வைத்த இடத்தில்

கொட்டிக் கவிழ்க்க ஒரு சுட்டி இல்லை

இட்ட கோலத்தை அழிக்க

ஒரு பிஞ்சுப் பாதம் இல்லை

இரு கை கொண்டு அள்ளி

சோற்றை வாரி இறைக்கவும் ஆளில்லை.

காது குளிர ம்மா, ப்பா,

தாத்தா, பாத்தி என்று
அழைக்கும் மழலைச் சொல்
கேட்கவே இல்லை.

ஆனால், எந்நேரமும் 

முழுச் சுத்தமாக
இருக்கும் வீடு 
எனக்கு தேவையே இல்லை.

இப்படி கலைந்த கோலமும், 

சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும்
பிள்ளைகள் இருக்கும் வீடுதான் 
என் விருப்பம்.

***
நேற்று மாலை மருமகள் போட்ட கண்ணன் காலடிகளை பேத்தி பூஜை முடிந்த சிறிது நேரத்திலே அழித்து விட்டாள். அப்பொழுது என் மகன் கேட்டான், “அம்மா! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில் கண்ணன் பாதங்கள் எவ்வளவு நாட்கள் அழியாமல் இருக்கும்” என்று.
அப்பொழுது தோன்றியது இது.

மீள் பதிவு



சின்னச் சின்ன கோலங்கள் 1







 










Tuesday, May 2, 2017

வீடு

IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’.  உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்

வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தாபாட்டிபெரியப்பாபெரியம்மா,
சித்திசித்தப்பாஅத்தைமாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மாபலாவாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்லஇரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்  
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
அடியேநீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.

Monday, May 1, 2017



குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITERபடத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்,மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில்அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங்,கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பேதட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில்சமீபகாலமாகடைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து,கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்துடைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும்கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம்,டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம்அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்துஇதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது,கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால்இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால்தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போதுதங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும்இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர்DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதேDIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால்அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு,டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

மீள் பதிவு