Tuesday, June 27, 2017





விதை உருண்டை 

மரம் நடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் வீட்டில் இடமில்லை , அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறோம் என்றெல்லாம் வருத்தப்படும் நண்பர்கள் மனது வைத்தால் காட்டையே உருவாக்கலாம். எப்படி என்றால் படத்தில் காட்டி உள்ளபடி விதைகளை சேகரித்து விதை உருண்டைகள் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வெளியூர் பயணங்களின் போது சாலையின் இருபக்கங்கள், தரிசு நிலங்களிலும் வீசி விட்டால் போதும். வயல்களில் வீசுவதை தவிர்க்கவும்.

தகுந்த சூழலில் உருண்டைகளில் உள்ள விதை முளைத்து விடும். மாறாக விதைகளாக மட்டும் வீசினால் அவை முளைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.

எனவே விதை உருண்டைகள் மூலம் மரம் வளர்ப்போம், நம் மண்ணை காப்போம் !!


No automatic alt text available.
நன்றி: பசுமை விடியல் 

Monday, June 19, 2017

எனக்கு WHATSAPPல் வந்த சிறுகதை.  படித்தேன், ரசித்தேன், உங்களூக்காகப் பகிர்ந்தேன்.   படங்கள் மட்டும் என்னுடையவை.



குரங்கு பெடல்












தோட்டத்த பாத்திங்களா ? என்ற வளர்மதியின் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை எதிர்கேள்வியே கேட்டேன். ஏன் என்ன ஆச்சு ? பாருங்க அப்புறம் சொல்றேன். போடி காலை பாத்துக்கிறேன்... டயர்டா இருக்கு என என் அலுலக சோம்பலோடு சோபாவில் விழுந்தேன். சரி அப்படியே போய் குளிச்சிட்டு வந்துட்டா சூடா சப்பாத்தி ரெடியா இருக்கு.. என்ற குரல் என்னை பாத்ரூம் நோக்கி தள்ளியது.

”இன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்.. யாரோ கூப்டுறாங்கனு வாசப்பக்கம் போய் பார்த்தேன். ரெண்டு வயசானவங்க. ஏதும் வீட்டு வேலைஇருக்காமானு கேட்டாங்க... ? பார்க்க பாவமா இருந்துச்சு... இருங்கனு சொல்லிட்டு ரெண்டு ஆப்பிள் கொடுத்தேன். வாங்கி வச்சிட்டு... பழையது இல்லையாமனு கேட்டாங்க... நா எங்க போக பழசுக்கு... நாங்க நைட் எப்பவும் சப்பாத்தி இல்லாட்டி ஓட்ஸ்னு சொன்னேன். இந்த தோட்டத்தை சுத்தப்படுத்தி தரோம்னு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லலாம்னு பார்த்தேன். அப்புறம் எப்படியும் தோட்ட வேலைக்கு ஆள் வரசொல்லுவிங்க ரூவா கொடுக்கணும்ல... அதான் சரினுட்டேன்.”

ம்ம்ம் அப்புறம்

செமய சுத்தப்படுத்தி... நல்லா பாத்துகொடுத்துட்டாங்க. ரூ. கொடுத்தேன் வாங்கல.. மதியம் சோறு மட்டும் கேட்டாங்க. சாப்ட்டு போய்ட்டாங்க.

ம்ம். பார்த்து இரு.. இந்த மாதிரி பகல்ல வந்து வீட நோட்டம் பாத்துட்டு சொல்லுவாங்க.

உங்க வாய் இருக்கே என்னைக்கு நல்லத சொல்லியிருக்கு.

ஒய்.. உலகம் நடப்ப சொல்றேண்டி... சும்மா பாலிமர்ல சீரியல் பார்த்தா இதெல்லாம் எங்க தெரியும்...

நீங்க மூடுங்க. லேடிஸ் ரஸ்லிங் பாக்கிறதுக்கு சீரியல் தேவல. போய் படுங்க

நான் சத்தமாய் சிரிக்க கூடுதல் கடுப்பில் சென்றாள். ஆனாலும் தோட்டத்தை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நேராக படுக்க சென்றுவிட்டேன். தூங்கி எழுவதற்குன் என்னைப்பற்றி.. நான் முத்துக்குமரன். சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். ஒரே மகன். இப்போது கோடை விடுமுறைக்கு என் அண்ணன் வீட்டுக்கு சென்று இருக்கிறான். என் மனைவி வளர்மதி. கம்யூட்டர் பட்டதாரி. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வெப் பேஜ் டிசைனிங் நிறுவனம் நடத்துகிறாள் நண்பர்களோடு சேர்ந்து. வீடு சோழிங்கநல்லூர் கடைசி.

ம்ம்ம்ம். நிசமமாவே காசு வாங்கலயா...

அவருக்கு காது கேட்காது போல. அந்தம்மா தான் பேசுது. சோறுபோட்டா போதும்னு சொல்லிட்டாங்க.

ஆம அந்த குழி எதுக்கு...

இங்க விழுற இலைகளை பெருக்கி அந்த குழிக்குள்ள தள்ளிடுங்கனு சொல்லிட்டு போனாங்க.

ம்ம்ம் . ஒகே. இதே மாதிரி மெயிண்டைன் பண்ணா நல்லா இருக்கும்.

நீ ஆபிஸ் கிளம்பலயா... பேச்சை நிறுத்த நாம் செய்ய வேண்டிய வேலையை சொல்வது மனைவிக்கு அழகு.

அடுத்த சில தினங்களில் இரவு என் அருகே மனைவி.

என்னங்க இன்னைக்கும் அவங்க வந்தாங்க.. நீங்க சொன்னது என் மைண்ட்ல ஒடிட்ட்டே இருந்துச்சு. தோட்டவேலை வேண்டாமா கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்குனு சொன்னேன். ஆன அதுக்கு அந்தம்மா.. இல்லைம்மா தோட்டத்தில் இவ்ளோ இடம் இருக்குல்ல.. கொஞ்சம் காய்கறி போட்ட..வீட்ல நல்ல காய்கறி கிடைக்கும்ல சொன்னாங்க. கூடவே தக்காளி கத்திரிக்கா,சின்ன வெங்காய விதையெல்லாம் காட்டுனாங்க.

சரி.. உடனே நீ சரி சொல்லிட்ட.

ம்ம்ம்.. பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியுது. அதான் கேமரால அவங்க உருவம் எல்லா இருக்கும்ல அப்புறம் ஏன் பயப்படுறீங்க...

சரி. உன் இஷ்டம்.

அப்புறம் நாளைக்கும் வராங்க.... நம்ம வீட்டு கிச்சன் இருந்து நாம பாத்திர கழுவுற தண்ணீய அப்படியே செடிகளுக்கு கொண்டு போய்ருவோம்னு சொல்றாங்க.

அதான் பாத்ரூம் குழாய் போதுல்ல..

அங்க சோப் எல்லாம் போடுரோமாம்...கெமிக்கல்னு சொல்றாங்க.

ஒரே ஒரு குழாய் மட்டும் போதும்னு சொல்றாங்க.. வாங்கிபோடச்சொல்லவா ? வீட்லயே நல்ல காய்கறி கிடைச்சா நல்லது தானே..

என்னமோ செய். காலைல ஏடிஎம்ல எடுத்துக்கோ... நம்ம கடையிலே வாங்க சொல்லு. என் மனைவி என்னைவிட சாமர்த்தியசாலி. லேசுக்குள் நம்ப மாட்டாள் அந்த நம்பிக்கையில்... காலம் ஓடியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கி விட்டது.. கிட்டதட்ட மாதங்கள் கடந்திருந்தது.. இதற்கிடையே அவர்கள் வீட்டுக்குள் வரும் அளவிற்கு பழகி விட்டார்கள். ஆனாலும் தோட்டம் சுத்தமாய் இருந்தது. மரங்கள் எல்லாம் பசுமையாய் மாறிவிட்டன. அவை குளிர்ச்சியை கொடுத்தது. அதிலும் குறிப்பாய் வரண்டு போய் இருந்த முருங்கையும், செம்பருத்தியும் வனப்பாய் இருந்தது.

என்னடி இது...

அரிசி உப்புமா கத்திரிக்கா கிச்சடி.. கத்திரிக்கா நம்ம வீட்ல விளைஞ்சது.

ஞாயிற்றுகிழமை சாப்டுற சாப்பாடா இது..

மூச். சும்மா சாப்டு பாருங்க.. வாசனையே செமயா இருக்கு.

உண்மையில் அப்படித்தான் இருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு கத்திரிக்காய் கிச்சடி சாப்பிட்டது இல்லை. மதியம் என்ன தெரியுமா ? நெய் கத்திருக்காய் பொறியல்.

போச்சா.. இன்னும் ஒரு வாரம் இதானா..

இல்லபா நீ வீட்ல இருக்கும் போது தான் இத செய்ய முடியும். இன்னொரு நாள் சிக்கன் சமைப்போம்.

இவ்ளோ விதையோடவா கத்திரிக்கா இருக்கும். ஆச்சரியத்தின் ஊடாகவே சாப்பிட்டேன். எனக்கு என் வீட்டு தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய் என்பதே பெருமையாய் இருந்தது. என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.

இன்னைக்கு ஆபிஸ் கிடையாது போல...

ஏண்டி...

ம்ம்ம்ம் ஏதோ கலவரமாம். கட்சிக்காரன யாரோ வெட்டி கொன்னுட்டாங்களாம். போன் பண்ணி கேட்டுகோங்க.. பக்கத்து விட்டு பசங்க காலேஜ் போகாம திரும்பி வந்துட்டாங்க. நான் அலைபேசியில் பேசினேன். நான் செல்லும் வழியில் தான் பிரச்சினை என்பதாலும்.. ஏற்கனவே சிலர் வந்துவிட்டதாலும்.. இருப்பவர்களை வைத்து கவனிக்கும் படி சொன்னேன். மதியத்திற்கு பிறகு வருகிறேன் என உத்திரவாதம் கொடுத்தேன். மிண்டும் பேப்பரில் மூழ்கினேன்.

யப்பா இங்க வாயேன் என்ற குரலுக்கு வாசலுக்கு வந்தேன். வந்ததும் தெரிந்தது.. இவர்கள் தான் அவர்கள் என்று. இதான் என் வீட்டுகாரரு. அவர்களை பார்த்தேன்... எப்படியும் இருவருக்கும் அறுபது வயதிற்க்கு மேல் இருக்கும்.

வணக்கம்யா. கத்திரிக்க நல்லா இருந்துச்சா.. அந்தம்மா பேசினார்.

நல்லா இருந்துச்சுமா

இன்னும் கொஞ்சநாள்ள சின்ன வெங்காயம் வந்துரும்.. அங்கிட்டு நாட்டுச் செம்பருத்தி வந்துரும். அது மூலிகை. இந்த மண்னுல் வேகம வளரும் அது. நான் பாப்பாட்ட சொல்லியிருக்கேன் அத எண்ணெய்ல போட்டு பயன் படுத்தலாம்.. நல்ல குளிர்ச்சி. முருங்கையும் அப்படித்தான். இப்ப காச்சிரும்.. பூ பூத்ததும் புள்ளைக்கு கொடுங்க.. வயிறு அப்படி சுத்தமாகும் சளியே வராது. இறங்கிடும். அந்த பெரியவர்.. இதில் எல்லாம் கலந்துகொள்ளாவில்லை. அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார். என் மனைவி வீட்டில் இருந்து காபி கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அவர்கள் வேலையை செய்ய தொடங்கினார்கள். என் மனைவி அவர்களோடு பேசத்தொடங்கிவிட்டார். நான் உள்ளே வந்துவிட்டேன்.

வேலை முடிந்து அவர்கள் கைகால் கழுவும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தேன். திண்டில் அவர்களும் நான் ஊஞ்சல் சேரிலும் அமர்ந்தோம்.

ஏன் பணம் வாங்கமாட்டேன்கிறீங்க...

புள்ள சோறு கொடுக்குது. அதுக்கு தானே தம்பி உழைக்கிறோம்... அதுவே கிடைச்சுட்டா அப்புறம் எதுக்கு பணம்

மத்த தேவைக்கு...

பையன் இருக்கான் தம்பி. ஒரு கடையில சூப்பர் வைசர். நல்ல சம்பளம். அவன் பாத்துக்கிறான்.

அப்புறம் ஏன் இப்படி இந்த வயசுல வேலை பார்க்கணும்..

இது வேலை இல்ல தம்பி..ஒரு சந்தோசம். காலம் காலமா விவசாயம் பாத்தவங்க.. இப்ப நிலம் இல்லை... வித்துட்டோம்.. அதான்

இப்படி எத்தனை வீட்ல வேலை நடக்குது..

இந்த ஒரு வீட்ல தான்.

ஏன் ஏன்.. இந்த ஏரியால இதை விட பெரியபெரிய வீடெல்லாம் இருக்கே..

அந்த அம்மா பதில் சொல்லவில்லை. பெரியவர் முகம் பார்த்தார்.

அவர் பேசினார். முதன் முறையாக... இதான் எங்க நிலம்.

எனக்கு சுருக்கென்றது. அங்கே ஒரு அமைதி நிலவியது. உங்க நிலமா... நான் பேங்க் லோன்ல வாங்கி இன்னும் லோன் கட்டிக்கிட்டு இருக்கேன். எப்படி உங்க நிலம்...

அவரே தொடர்ந்தார்.. இந்த நிலத்தில தான் நான் என் அய்யா எல்லாரும் விவசாயம் பார்த்தோம். சுத்திமுத்தி எல்லாரும் வித்துட்டாங்க.. சொல்லிப்பார்த்தேன் யாரும் கேட்கல... நான் நடுவில நிலத்த வச்சி என்ன செய்ய.. அதான் வித்தேன். வித்த காசுல பொண்ணுக்கு பையனுக்கும் பிரிச்சு கொடுத்தாச்சு. எங்களுக்கு கொஞ்சம் பேங்கல இருக்கு.

பெரியவரே நிலம் என்னோடது. நான் காசு போட்டு வாங்கியிருக்கேன். அவருக்கு காது கேட்காது என என் மனைவி சொன்னது நியாபகம் வந்தது.. இன்னும் சத்தமாய் சொன்னேன்.

நிலத்துக்கு மேல தான் நீங்க வாங்க முடியும். நிலத்துக்கி கீழ இல்ல ...கீழ என்ன நடக்குது விவசாயிக்கு தான் தெரியும் எப்பவும் எல்லா நிலமும் முதல்ல விவசாயிக்கு தான்.

எனக்கு கோபம் வந்தது. ஒ அதுனால தான் வந்து வேலை பாத்திங்களா.. நிலம் உங்கதுனு... கொஞ்சம் சத்தமாய் கேட்டேன்.

அய்யோ தம்பி கோபபடாதீங்க. நான் அந்த அர்த்ததில சொல்லல... என் பொண்ண நகை பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாரு என் மாப்பிள்ளை. அதனால் என் பொண்ணு இல்லனு ஆயிடுமா. இதே இந்த மகராசி.. என் மனைவியை கை காட்டினார்... அப்படித்தானே இங்கே வந்திருப்பாங்க. இவங்க மேல இருக்கிற நகை நட்டு இந்த வீடு எல்லாம் உங்களுக்கு சொந்தம் ஆனா உள்ள ஓடுற ரத்தம் இவங்க அப்பா அம்மாக்குள்ள சொந்தமில்லையா. இரண்டு பேர்க்கும் உரிமை இருக்குல்ல. இன்னைக்கும் ஒரு கல்யாணம் காட்சினு அம்மாவீட்டு போய் உக்கார மாட்டாங்களா.. இல்ல இவங்க அம்மா அப்பா எங்களுக்கு தொடர்பே இல்லைனு போய்டுவாங்களா... அது மாதிரி எங்களுக்கு இந்த நிலம். நீங்க வாங்கிட்டிங்க..ஆனாலும் இந்த மண் நாங்க புரண்ட மண் இல்லையா... இத உரிமைல சொல்லல.. உழைச்சிருக்கோம்ங்கிற நம்பிக்கையில சொல்றேன் தம்பி.

எனக்கு கோபம் கொஞ்சம் குறைந்தது.. ஒரு வித ஆற்றாமை பொங்கியது. என்ன சொல்வது என தெரியவில்லை. இந்த பக்க நிலமெல்லாம் காந்த பூமி தம்பி. எது போட்டலும் பூமியில அப்படி புடிச்சி நின்னுகும். மருந்து அடிக்காம இருந்தா கிடைக்கிற ஒவ்வொன்னும் ஒரு மருந்துக்கு சமம். எங்கே.. எல்லாம் போச்சு.. வெறும் வீடுதான். பாருங்க இத்துணூண்டு இடத்திலே இவ்ளோ கிடைக்குது. இனி நீங்க கடையில் கத்திரிக்கா பாத்த என்ன தோணும்.. வீட்டுக்காய் மாதிரி வருமானு தானே..

அதே மாதிரிதான் தம்பி.. என் நிலம்னு எனக்கு தோணும். எத்தனை பேர் கைமாறட்டும். இது என் நிலம் தாம் தம்பி. ஏற்கனவே நிலத்த வித்து காசு வாங்கிட்டேன்.. இப்ப பார்க்கிற வேலை காசுக்கு இல்லை.. ஒரு திருப்திக்கு. இதுல கொஞ்சம் வேலை பார்த்துட்டு படுத்த்தா.. அன்னைக்கு உறுத்தல் இல்லாம தூங்குவேன். ஏதோ அய்யன் கொடுத்த நிலத்தை வித்துட்டோமோனு ஒரு குற்ற உணர்ச்சி. என்னென்னமோ கெமிக்கல் போட்டு நிலத்தை கொன்னு.. செத்த போன நிலம் தண்ணிய வாங்கி வாங்கி குடிக்குது... இது தெரியாம விவசாயி சாகுறான். அவன் நிலம் சாகுது. என்ன செய்ய ..? சின்ன வயசுல சைக்கிள் கத்துக்கும் போது குரங்கு பெடல்னு ஒன்னு போடுவோமே டக்டக்னு ... அது மாதிரி தான் எங்க வாழ்க்கை... வண்டி என்னமோ முன்னாடித்தா போகுது.. ஆனா போற இடத்துக்குள்ள உசுரும் போய்டுது..

சோறு கொண்டா தாயி.. சாப்டு கிளம்புவோம்.. என குரல் கொடுத்தார் மனைவியை நோக்கி.

வாங்களேன் உள்ளே வச்சி சாப்பிடலாம்... அழைத்தேன்

அய்யோ நீங்க ஹோட்டல்காரங்க மாதிரி டேபிள்ள வைச்சி சாப்பிடுவிங்க. சரியா வராது . சாப்பிட்ட திருப்தியே வராது தம்பி.

என் மனைவி பறிமார அவர்கள் சாப்பிட்டார்கள். நான் உள்ளே இருந்தேன். ஆனால் மனம் முழுவதும் அவர்கள் பேச்சில் இருந்தது.

எப்ப வேணா நீங்க வீட்டுக்கு வரலாம்... இது உங்க வீடு மாதிரி.. என்ன வேணா போட்டு வளருங்க.. என்னால் முடிஞ்ச உதவி செய்றேன்.அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது முகம் பார்த்து சொன்னேன்.

ரொம்ப நன்றி தம்பி. ஏதும் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க... உசுரோடு இருக்கிற வரைக்கும் எங்க மண்ணுல வேலை பார்த்தோம்னு திருப்தி போதும். அத கொடுத்திட்டீங்க..நன்றி தம்பி ...என விடைபெற்றார். அப்போதுதான் உணர்ந்தேன்.. அவருக்கு காது கேட்கிறது. ஆனால் விவசாயம் தவிர்த்து எதுவும் பேசவேண்டாம் என அவர் காதுகளை மூடிவிட்டார் என தெரிந்தது. முதல்முறையாக வீட்டை விட தோட்டம் அழகாய் தெரிந்தது...!!!!
 

Image may contain: 1 person